Monday, September 14, 2009

ஒரு (கெட்ட) வார்த்தைக் கதை

ராமு நல்ல பையன். கெட்டிக்காரன். ஆனால் போக்கிரி. யாருக்கும் அடங்கமாட்டான். அவனால், அவன் இருந்த கிராமத்தில் அடிக்கடி ஏதாவது பிரச்னை ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அதனால் அவன் பெற்றோர் அவனை சென்னைக்கு அனுப்பிப் படிக்க வைக்கத் தீர்மானித்தனர். சென்னையில் ராமுவின் மாமா வசித்து வந்தார். திருவல்லிக்கேணியில் அவர் வீடு இருந்தது. அருகில் உள்ள பள்ளியில் அவர் பியூனாக வேலை பார்த்து வந்தார். எனவே ராமுவின் பெற்றோர், ஒரு சுபயோக சுபதினத்தில், அவனை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அவன் மாமா வேலை பார்க்கும் பள்ளியிலேயே அவனையும் சேர்த்து விட்டனர். அவனும் நன்கு படிக்க ஆரம்பித்தான் .மாதங்கள் உருண்டோடின. நகரப் பழக்க வழக்கங்கள் மெல்ல அவன் மீது படிய ஆரம்பித்தன. பட்டணத்தின் மீது உள்ள பிரமிப்பு கொஞ்சம் கொஞ்சமாக விலகி, நாளடைவில், அவனும் ஒரு நகரவாசியாகி விட்டான்.

ஆனால் ஒரு பிரச்னை. ராமு எப்பொழுது பேசினாலும், சென்னைக்கே உரித்தான ஒரு (கெட்ட) வார்த்தையை உதிர்த்துவிட்டுத் தான் மற்ற வார்த்தைகள் பேசுவான். அந்த அளவிற்கு அவன் நகரவாசியாகி விட்டான். அந்த வார்த்தை, அதன் வீரியத்தன்மையையும், அர்த்தத்தையும் இழந்து பல வருடங்களாகின்றன என்றாலும், சிறுவனாகிய அவன் அதை எப்பொழுதும் உச்சரிப்பது பள்ளியில் பிரச்னையாகிவிட்டது.

ஆசிரியர் பலமுறை எச்சரித்தும், அவன் மாமா அவனைப் பலமுறை கண்டித்தும் ஒரு பயனும் இல்லை. அவன் வாயிலிருந்து அவன் அறிந்தோ, அறியாமலோ '...........' எனத் தொடங்கும் அந்த வார்த்தை வந்து கொண்டுதான் இருந்தது.

'........... சூப்பர் சினிமாடா..'
'........... சூப்பர் பாட்டுடா...'
'........... பீச்சுக்குப் போலாமா'
'........... என்ன டிபன் இன்னிக்கு..'

இப்படி, வீட்டிலும், வெளியிலும் என்று அவன் 'திருவாய்மொழி' தொடர, அவனே அதனைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை. அவனால் மற்ற பள்ளிப் பிள்ளைகளும் கெட்டுப் போகிறார்கள் என்ற புகாரினால், அவன் பள்ளியை விட்டே நிற்கும் சூழ்நிலை உருவானது.

ஒரு நல்ல நாளில் ராமு மீண்டும் தனது ஊருக்கே திரும்பினான். அவன் பெற்றோருக்கு மிகவும் வருத்தம் தான். ஆனால் அங்கு போயும் அவன் திருந்தவில்லை. அந்த வார்த்தை அவன் வாயிலிருந்து வந்து கொண்டுதான் இருந்தது. கிராமத்தில் உள்ளவர்களுக்கு முதலில் அந்த வார்த்தை புரியாததாலும், அதன் அர்த்தம் சரியாகத் தெரியாததாலும் ஆரம்பத்தில் பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. நாளடைவில் அவன் வயதொத்த மற்ற சிலரும் அந்த வார்த்தையை உச்சரிக்கத் தொடங்க, பின்னர் அதன் அர்த்தம் தெரிய வந்தததும், ராமுவை கண்டிக்க ஆரம்பித்தனர். ராமுவின் பெற்றோரிடமும் புகார் செய்தனர்.

ராமுவின் பெற்றோருக்கு மிகுந்த மனவருத்தம் உண்டாயிற்று. வேறு வழியில்லாமல், அருகில் உள்ள கோயிலில், ஆலய உதவியாளனாய் அவனைச் சேர்த்து விட்டனர். இந்த மாதிரி, கோயில், மந்திரம், சாமி என்றாலாவது பையன் திருந்துவான் என்பது அவர்கள் நம்பிக்கை. பூசாரிக்கு உதவுவது, மணியடிப்பது, தரிசனம் செய்ய வருபவரை, லைனில் வருமாறு ஒழுங்குபடுத்துவது, பிரசாதம் தருவது என்பன அவன் வேலைகள்.

அவனும் மிகுந்த கட்டுப்பாடோடு தான் நடந்து கொண்டான். ஆயினும் என்ன? வழக்கம் போல் அவனையும் மீறி அந்த வார்த்தை வரத்தான் செய்தது.

அதுவும்...
'........... லைன்ல வா'
'........... சத்தம் போடாதே'
'........... அர்ச்சனையா பண்ணனும்'
'........... இந்தா பிரசாதம்'

...என்றெல்லாம் அவன் வாயிலிருந்து வெளிவந்ததும், அனைவரும் ஒன்று சேர்ந்து அவனை நையப் புடைக்க ஆரம்பித்தனர். அந்த வேலையையும் அவன் இழக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இறுதியில் அவன் பெற்றோரின் முயற்சியால் அது தடுக்கப்பட்டது. அவன் பெற்றோர்கள் ஆலய இறைவனை மனமுருக வேண்டினர். தங்கள் மகனைத் திருத்துமாறு மனமுருகப் பிரார்த்தித்தனர்.

இறைவனும் திருவுளம் இறங்கினான். அவர்கள் கனவில் தோன்றி "நாளை எல்லாப் பிரச்னைக்கு முடிவு ஏற்படும்" என்று திருவாய் மலர்ந்தருளினான்.

மறுநாள் பொழுது விடிந்தது. ராமு வழக்கம் போல ஆலயத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவர் வந்து பிரசாதம் கேட்கவும், எடுத்துக் கொடுக்க முற்பட்டான். அவனையும் அறியாமல் அவன் வாய் முணுமுணுத்தது. "........... பிரசாதம்.."

அவ்வளவுதான் கடவுளுக்கு அளவற்ற சினம் ஏற்பட்டது. ' தன்னுடைய சன்னதியிலேயே, இவ்வாறு வரைமுறை இல்லாமல் இவன் நடக்கக் காரணம், வாயைத் திறந்து பேசுவதனால் தானே, நாவு என்ற ஒன்று இருப்பதால் தானே, இவனை முழுக்க ஊமையாக்கி விட்டால்...' நினைத்த கடவுள் தனது குண்டாந்தடியை கடும் சீற்றத்துடன் அவன் கழுத்தை நோக்கி எறிந்தார்.

அந்த நேரம் பார்த்து அவன் கையில் வைத்திருந்த எலுமிச்சம்பழம் கீழே விழ, அதை அவன் எடுக்கக் குனிந்தான்.

இறைவனின் குறி தவறியது. குண்டாந்தடி வெறும் சுவற்றின் மீது மோதிக் கீழே விழுந்தது.


கடவுள் சொன்னார்:

"'........... ஜஸ்ட் மிஸ்..."

*************************************************************************************

நீதி: கடவுளே ஆனாலும், பழக்க வழக்கங்களின் பாதிப்பிலிருந்து ஒருவர் தப்பிவிட இயலாது.

*************************************************************************************

Saturday, September 12, 2009

அம்பியின் அனுபவங்கள்- இறுதிப்பகுதி

முதல் பகுதி இங்கே...


இரண்டாம் பகுதி இங்கே...


“ஒண்ணும் இல்லை. நம்ம ஃப்ரெண்ட்.” என்றார்.

நான் அதைக் கவனிக்காமல் “சரி! சார், நம்ம விஷயம் என்னாச்சு, எவ்வளவு செலவாகும்?” என்றேன்

“ம்! ஹோமத்திற்கு ஒரு ஐயாயிரம் ஆகும். அப்புறம் இராமேசுவரம், திருச்செந்தூர், தனுஷ்கோடில போய்ப் பரிகாரம் ஒண்ணு பண்ணனும். உங்களால முடிஞ்சா நீங்க நேரே போய் பண்ணலாம். முடியாத பட்சத்துல பணத்தை எங்ககிட்ட கொடுத்திடுங்கோ. உங்க சார்புல நாங்க பண்ணிடுவோம். அததுக்கு ஆள் இருக்கா என் கிட்ட. என்ன அதுக்கு ஒரு பத்தாயிரம் கிட்ட ஆகும். அப்புறம் முக்கியமா மோதிரம் ஒண்ணு. தங்கத்துல குரு விரல்ல, அதாவது வலது கை ஆள்காட்டிவிரல்ல, கனக புஷ்பராகம் கல் வைச்சுப் போடணும். அப்புறம் மோதிர விரல்ல வெள்ளில, முத்து பதிச்சு ஒரு மோதிரம் போடணும். அவ்வளவு தான் உங்க பிராப்ளம் எல்லாம் சால்வ்டு. கடைசியா, சாமியாரைப் பார்க்கறதும் பார்க்காததும் உங்க இஷ்டம்.”

“என்ன! எல்லாம் சேர்த்தா ஒரு முப்பது, நாப்பது ஆயிடும் போல இருக்கே!” என்றேன்.

“அவ்வளவு ஒண்ணும் ஆகாது சுவாமி! நா என்னால முடிஞ்சவரிக்கும், சல்லிசா முடிக்கப் பார்க்கறேன், யூ டோண்ட் வொர்ரி” என்றார்.

“சரி சார், மோதிரம், என் பிரண்டோட அங்கிள் கடைல வாங்கிக்கலாம், ஒண்ணும் பிரச்னை இல்ல, மெதுவாக் காசு கொடுத்தாப் போதும்.”

“சார்! கண்ட இடத்துல வாங்காதீங்கோ! நான் சொல்ற இடத்துல வாங்கினீங்கன்னா, விலையும் சல்லிசு, நம்பகமாகவும் இருக்கும். இல்லன்னா அப்புறம் யாராவது, கண்டத, டூப்ளீகேட்டக் கொடுத்து ஏமாத்திடுவா உங்களை!”

“இல்லை சார்! இதுல ஏமாறதுக்கு இடமே இல்லை. என் பிரண்டோட அங்கிள் ரொம்ப வருஷமா இந்த பிசினசு தான் பண்றார். ரொம்ப நம்பகமானவர். நாணயமானவர்”

“எல்லாம் சரி தான் சுவாமின்! கல் எல்லாம் நல்லதா இருக்கனுமில்லையா, நான் சொல்றவா, பூஜை எல்லாம் பண்ணி, அதுக்கு நல்ல பவர் ஏத்தி வச்சிருக்கா, போட்டுண்டேள்னா காரியம் உடனே நடக்கும்”

“பராவாயில்லை சார்! நான் என் பிரண்டோட அங்கிள் கடையிலயே வாங்கிக்கறேன். அவரும் அந்த மாதிரி பூஜை எல்லாம் பண்ணி தான் விக்கிறார்”

“அப்புறம் உங்க இஷ்டம் சுவாமின்! நான் சொல்றதைச் சொல்லிட்டேன், ஏதாவது, எங்கேயாவது வாங்கிப் போட்டு விபரீதமா ஏதாவது நடந்தா நான் பொறுப்பு இல்லை. என்னைக் குறை சொல்லக் கூடாது ஆமா!”

“என்ன சார் பயமுறுத்தறீங்க”

“நான் சொல்றதைச் சொல்லிட்டேன். நான் ஒண்ணும் பயமுறுத்தலை. இப்படித்தான் நமக்குத் தெரிஞ்ச பையன் சொல்லச் சொல்லக் கேட்காம வேற இடத்துல வாங்கிப் போட்டுண்டான். என்ன ஆச்சு? . தோஷம் கழிக்காத கல். அடுத்த மாதத்துலயே வண்டி ஆக்சிடெண்டாகி, கால் ஒடிஞ்சு இப்போ ஆசுபத்திரில இருக்கான். எல்லாம் அவா அவா விதி, நாம என்ன செய்ய முடியும்?”

“சரி சார்! அந்த ஜூவல்லரி பேரென்ன?”

ஜூவல்லரி பெயரை சொன்னார்.

முன்பு போன் வந்த போது கிசு கிசுக் குரலில் பேசிய அதே ஜூவல்லரி.

எனக்கு எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிய ஆரம்பித்தது.

“ஓகோ! இப்படித்தான் நீங்க ஊர ஏமாத்தறீங்களா?” என்றேன்.

“என்னது நான் ஊர ஏமாத்துறேனா? அய்யோ, என்ன சொல்றே நீ! வைதேகி! வைதேகி” கத்த ஆரம்பித்தார். கண்கள் சிவந்து விட, கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன அவருக்கு.

அதற்குள் ‘வைதேகி’ என அழைக்கப்பட்ட பெண்மணியும், மற்றும் ஒரு திடகாத்திரமான ஆணும் அங்கே வந்து விட, எனக்கு இப்பொழுது உதறல் எடுத்தது.

“என்ன! என்ன!” என்றனர் இருவரும். அதுவும் அந்த திடகாத்திரமான ஆள் வேக வேகமாக என்னை நெருங்கினான்.

எனக்கு உடல் வியர்த்தது. நாக்கு குழறியது. “அது வந்து…. அது வந்து… நான் போயிட்டு அப்புறம் வரேன்.” பதிலைக் கூட எதிர்பார்க்காமல், தேவராஜனுக்கான ஃபீஸ் நூறு ரூபாயை, மேசை மீது வைத்து விட்டு வேகமாக வெளியே வந்தேன் கோழை போல.

தேவராஜன் முதுகிற்குப் பின்னால் என்னை முறைத்துப் பார்ப்பதையும், ஏதேதோ சொல்லித் திட்டுவதையும், நன்கு உணர முடிந்தது. வேகவேகமாய் பஸ் ஸ்டாண்ட் வந்து, பஸ்ஸில் ஏறிய பின்பு தான் எனக்கு உயிர்வந்தது.

நான் செய்தது சரியா, தவறா இன்னமும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் அனுமானித்தது இது தான். — இது போன்று ஜோதிடம், ஜாதகம் பார்ப்பவர்களில் பலர், அது பற்றிய முழு அறிவு பெற்றவர்களல்ல. அந்தத் தொன்மையான சாஸ்திரம் பற்றி முழுமையாக அறிந்தவர்களும் அல்ல. எல்லாம் அரைகுறைதான். அவர்களின் நோக்கம் பணம் சம்பாதிப்பது மட்டுமே. இவர்கள் சைக்காலஜியையும் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். அதைக் கொண்டு, தன்னிடம் வருபவர்களை ஏமாற்றிப் பணம் சம்பாதித்து வருகின்றனர். இந்தப் போலி ஜோதிடர்களிடம், யாராவது ஜோதிடம் பார்க்க வந்தால், அவர்களைப் பற்றி, அவர்களுக்கே தெரியாமல் பேசி அறிந்து, அவர்களிடமே அதைத் திருப்பிக் கூறுகின்றனர். வந்திருப்பவர்களும், இதனை உணராமல் ஆகா, ஒகோ எனப் புகழ ஆரம்பிக்கின்றனர். இவ்வாறு புகழ்பவர்கள், தங்களுக்குத் தெரிந்தவரிடத்தில், நண்பரிடத்தில் இது போன்ற ஜோதிடர்களைப் பற்றிக் கூற அவர்களும், இவர்களை நாடி வருகின்றனர். ஏமாறுகின்றனர்.

அதே சமயம், ஒரு சில உண்மையான ஜோதிடர்களும் இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் நோக்கம் பணம், புகழ் சம்பாதிப்பதல்ல. நாடி வருபவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுவது. நெறிப்படுத்துவது தான். பரிகாரம், ஹோமம், மோதிரம் என்று தவறான வழியை இவர்கள் காட்ட மாட்டார்கள். ஆலய தரிசனம், அர்ச்சனை, தீபமேற்றுதல் போன்ற எளிய பரிகாரங்கள் தான் இவர்கள் கூறுவது. ஆனால் இவர்களைப் போன்றவர்களுக்கு செல்வாக்குக் கிடையாது. மக்கள் ஆடம்பரமாக உலா வரும் போலிகளைக் கண்டே ஏமாறுகின்றனர். அப்புறம் பொய், பித்தலாட்டம் என புலம்புகின்றனர்.

என்னைப் பற்றி சோதிடர் கூறியதும் ஒரு வித உளவியல் அனுமானத்தினால் இருக்கலாம். நான் நடந்து வந்ததைப் பார்த்து, என்னிடம் வண்டி இல்லை என முடிவு கட்டியிருக்கலாம். வேலையில் பிரச்னை எனக் கூறியதில் இருந்து, நண்பன், துரோகம் என மேற் கொண்டு சிலவற்றைக் கூறியிருக்கலாம். திருமணம் ஆகவில்லை என்பதை அறிந்து, காதல், ஆசை எனப் பலவற்றிக் கூறியிருக்கலாம். அவை எல்லோருக்கும், எக்காலத்தும் பொருந்தக் கூடியது தானே!.

இது போன்றே எனக்கு முன்னால் பார்த்த மாமிக்கும் கூறியிருக்கலாம். “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்ற பழமொழியைப் போல சிலவற்றை அனுமானித்துக் கூற, அவை சரியாக இருந்திருக்கலாம். மாமியும் ஏமாந்து இருக்கலாம்.

ஆகவே, அன்பர்களே, இந்த சாமியார், ஜோதிடம், வாஸ்து என்று நேரத்தைச் செலவிடுவதற்கு பதில், நம்மையே நாம் நம்ப வேண்டும். அல்லது அனுபவம் வாய்ந்த பெரியோர்களை ஆலோசனை கேட்டு நடந்தால், வாழ்க்கையில் எந்தப் பிரச்னை வந்தாலும் சமாளித்து விடலாம். அதனால் தான் வள்ளுவரும், ‘பெரியாரைத் துணை கோடல்’ என ஒரு அதிகாரம் இயற்றியிருக்கிறார்.

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

அன்புடன்
அம்பி

Friday, September 4, 2009

அம்பியின் அனுபவங்கள் -- 2

இந்தக் கதையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்த நண்பருக்கு நன்றி!


********


முதல் பகுதி இங்கே ....

நான் உள்ளே அழைக்கப்பட்டேன்।

“வாங்கோ! சாரி! செத்த லேட்டாயிடுத்து!” என்றார் தேவராஜன்।

“அதனாலென்ன சார்! பரவாயில்லை! ரொம்ப சிம்பிளாயிருக்கீங்களே! நான், மத்த ஜோதிடர் மாதிரி, அசிஸ்டெண்ட், ஆபிஸ், செல்போன் எல்லாம் இருக்கும்னு நினைச்சிட்டு இருந்தேன்” என்றேன்.

“நீங்க நினைகிறதில ஒண்ணும் தப்பே இல்லை! இன்னும் சித்த நாள் போனவுடனே நானே ஒரு ஆபிஸ் ஓப்பன் பண்ணலாம்னு தான் இருக்கேன்। பார்க்கலாம்। ஆமா உங்க ஜாதகத்தைக் கொண்டாங்கோ.”

“இந்தாங்க சார்! நீங்க தான் பார்த்துச் சொல்லனும், எங்க போனாலும் ஒரே பிரச்னை. சாண் ஏறினா… முழம் சறுக்கினாப் பரவாயில்லை. இங்கே அடி சறுக்கறது. ஏன்னு தான் தெரியலை. நீங்க தான் கொஞ்சம் சரி பண்ணனும். வேலை, உத்யோகம், கல்யாணம்னு எதுவும் இன்னும் சரியா அமையலை”

“கவலைப்படாதீங்கோ, எல்லாம் நான் பார்த்துக்கறேன், ஆகா, பத்தாமிடத்துல சனி, செவ்வாய் சேர்க்கை, உங்களுக்கு உத்யோகத்துல நிறையப் பிரச்னை இருக்குமே”

“ஆமாம் சார்”

“சரியா சொன்னேனா, இன்னும் கேளுங்கோ, கூட இருக்கறவனே, குழி பறிப்பான், நண்பன் மாதிரிப் பழகிட்டு முதுகில குத்துவான், போட்டுக் குடுப்பான், யாரை நம்பறது, யாரைப் பகைச்சுக்கறது ஒண்ணுமே உங்களுக்குத் தெரியாது சரியா?”

“கரெக்ட் சார்! எப்படி இவ்வளவு சரியா சொல்றீங்க?”

“எல்லாம் ஜாதகம் சொல்றதே சார்! இன்னும் கேளுங்கோ, உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, காதல் திருமணம் பண்ணிக்க ஆசை, ஆனா முடியலை, சரியா, அப்புறம் எல்லார் மாதிரியும் ஒரு வண்டி வாங்கனும்னு ஆசை, ஆனா பொருளாதரம் உதவி இல்லை. குடும்பத்திலயும் சரியான உதவி இல்லை. சரியா?”

“அய்யோ, சார்! எப்படி சார், எல்லாத்தையும் புட்டுப் புட்டு வைக்கிறீங்களே, எப்படி இது?. என்னால நம்பவே முடியலையே” என்றேன் பதட்டத்துடன்.

ஒருவேளை ஏதாவது இஷிணி மாதிரி தேவதை வந்து என்னைப் பற்றி இவர் காதில் சொல்கிறதா என்ன!, எப்படி இவ்வளவு சரியாகச் சொல்கிறார்! என்னால் ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.

” ம்! ஆச்சா! ம்! ஒண்ணும் பிராப்ளம் இல்ல. ஈசியாச் சரி பண்ணிடலாம், சின்னதா ஒரு நவக்ரஹ சாந்தி ஹோமம் பண்ணனும். அப்புறம் சில பரிகாரங்கள் கோயில்ல போய் பண்ணனும். பண்ணினா எல்லாப் பிரச்னையும் சரியாப் போயிடும்.”

“நிஜமாச் சரியாப் போயிடுமா சார்!”

“அந்தச் சந்தேகமே உங்களுக்கு வேண்டாம். நிச்சயமா சரியாப் போயிடும். அப்புறம் நான் ஒரு யந்திரம் எழுதித் தரேன். அதை வீட்டுல வச்சு பூஜை பண்ணுங்கோ, கல் வச்ச மோதிரம் ஒண்ணும் போடணும். அதையும் போட்டா எல்லாம் சரியாப் போயிடும். அப்புறம் நீங்களே நினைச்சாலும் உங்களாலே கீழே வர முடியாது. அவ்வளவு உசரத்துக்குப் போயிடுவேள்”

“நிஜமாவா சார்?” என்றேன் ஆச்சர்யத்துடன்.

“ஆமாம். நிச்சயமான்னா... எங்க உங்க கையக் காட்டுங்கோ.ஆஹா... ம்! சுக்ர மேடு ரொம்ப ஸ்டாராங்கா இருக்கு, ம் யோகம் தான், அய்யா, மன்மதராசா போல இருக்கே”

“ம்ஹூம், ம்...ம்ம்ம், ஹி, ஹி ஆமா” என்று உளறிக் கொட்டினேன்.

“சரி! சரி! ஒரு சித்து வேலை பண்ணப் போறேன்! திருவண்ணாமலை போயிருந்தப்போ அங்கே ஒரு சித்தர் சொல்லிக் கொடுத்தது. ஆஹா! சித்தர்கள் எல்லாம் என்னமா பறந்து பறந்து போறா தெரியுமா?”

“நிஜமாவா சார்! நீங்க பார்த்தீங்களா!”

“ஆமா, இல்லியா பின்னே, காத்து வேகம்பாலே அது மாதிரி பறந்து பறந்து அப்பா! புல்லரிக்கிறது நேக்கு!”

“அய்யோ! நீங்க ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கனும் சார், சித்தர்களையே நேர்ல பார்த்தேன்னு சொல்றீங்களே, ஆமா என்ன சித்து வேலை பண்ணப் போறீங்க?, வாய்க்குள்ள இருந்து லிங்கம் ஏதாவது எடுக்கப் போறீங்களா?. இல்லை செயின் மாதிரி ஏதாவது காத்துல இருந்து வரவழைக்கப் போறீங்களா?”

“ம்ஹூம்! அதெல்லாம் இல்லை, உங்க கையை நீட்டுங்கோ சொல்றேன்”

கையை நீட்டினேன்.

“ம்! இந்த விபூதி சித்தர் விபூதி! என்ன வாசனை வருதுன்னு பார்த்துட்டுச் சொல்லுங்கோ!”

“விபூதி வாசனை தான் வருது”

“அப்படியா, ம்! ம்! இப்போ பாருங்கோ”

ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தவாறே என் கையில் விபூதியைக் கொட்டினார்.

முகர்ந்து பார்த்தேன்

“இப்பவும் அந்த வாசனை தான் வருது சார்”

“நன்னாப் பாருங்கோ சார்! மனோரஞ்சிதம் வாசனை வரலை”

“இல்லையே” என்றேன் சற்றுக் கவலையுடன். இங்கே சென்னையிலேயே பிறந்து வளர்ந்ததால், இந்த மனோரஞ்சிதம் எப்படி இருக்கும், அதன் வாசனை எப்படிப்பட்டது என்றெல்லாம் எனக்குத் தெரியாமல் போய்விட்டது. ஆனால் அவர் கொடுத்த விபூதியில் முன்பு என்ன வாசனை வந்ததோ அது தான் இப்பவும் வந்தது. அது மட்டும் சர்வ நிச்சயம்.

“இப்போப் பாருங்கோ” என்றார் தேவர். முன்பை விடச் சற்று அதிகமாக மந்திரத்தை முணுமுணுத்துவிட்டு, அதிகமான விபூதியைக் கையில் கொட்டினார்.

நான் முகர்ந்து பார்த்து விட்டு விழித்தேன்.

“மல்லிப் பூ வாசனை வரலை” என்றார்.

மீண்டும் முகர்ந்து பார்த்தேன். மல்லிப் பூ வாசனை வருகிற மாதிரித் தான் இருந்தது ஒரு வேளை பிரமையோ? ஒன்றும் புரியாமல் சந்தேகப்பட்டு மறுபடியும் நன்கு முகர்ந்து பார்த்ததில், பழைய விபூதி வாசனைதான் அடித்தது.

“இல்லையே சார்! விபூதி வாசனை தான் வரது” என்றேன்.

“போச்சு போங்கோ! சரி இப்போப் பாருங்கோ நிச்சயம் வேற ஏதாவது வாசனை வரும் குறிப்பா ரோஜாப் பூ வாசனை கண்டிப்பா வரணும்.”

என்னென்னெவோ மாஜிக் மாதிரி விரல்களை ஆட்டி விபூதியைக் கையில் கொட்டினார். மறுபடியும் முகர்ந்து பார்த்தேன். மூக்குப் பொடி வாடையும், வெற்றிலைப் புகையிலை வாடையும் சற்றே கலந்து அடித்த மாதிரி இருந்தது. தேவர் மூக்கிலும், வாயிலும் அவை குடியேறி இருந்ததனாலோ என்னவோ! மற்றபடி பழைய விபூதி வாடைதான். அதிலும் கூட முன்னைப் போல வாசனை இல்லை. வெகு நேரம் விபூதியைக் கையிலேயே வைத்திருந்தால் வாசனை போய் விடாதா என்ன! தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை. திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தேன்.

“என்ன ஆச்சு? இப்பொ தெரியறதா?” என்றார் தேவர்

“இல்லை! ஒண்ணும் இல்லை! எனக்கு ஒரு வாசனையும் அடிக்கலை. சொல்லப் போனா, முன்னை விட விபூதி வாசனை கூடக் குறைஞ்ச மாதிரி இருக்கு!”

“அப்படியா! அப்போ உங்களுக்கு ஏதோ கோளாறு இருக்கு, எல்லாருக்கும் நடக்கிறது உங்களுக்கு நடக்கலைன்னா, என்னத்தச் சொல்றது? ஏதாவது தோஷமா இருக்கலாம்! என்றார்.

“அய்யோ! என்ன சொல்றீங்க நீங்க” என்றேன் அதிர்ச்சியுடன்.

“ஆமா, எனக்கு என்னவோ சந்தேகமாத் தான் இருக்கு, இங்க சுங்குவார் சத்திரம் பக்கத்துல, ஒரு சாமியார் இருக்கார். வெத்திலைல மை தடவிப் பார்த்து எல்லாததையும் சொல்லி விடுவார். விருப்பம் இருந்தாப் போய் பாருங்கோ, முதல்ல நான் சொல்ற ஹோமம் எல்லாத்தையும் பண்ணிட்டு, நம்ம வேலையை முடிச்சுட்டுக் கடைசியா அங்க போலாம். நா வேணாலும் துணைக்கு வரேன்” என்றார்.

“சரி! சரி! எவ்வளவு செலவாகும்?”

“ம், பார்த்துச் சொல்றேன்”

அதற்குள் போன் வீரிட்டது. பக்கது அறைக்குள்ளே சென்று அதை அவசரமாக எடுத்து “ஹலோ” என்றார்.

“……………… ஜூவல்லரியா சொலுங்கோ என்ன விசேஷம்?.” உடனே குரலைத் தழைத்துக் கொண்டார்.

நான் அசுவாரசியமாய் வழக்கம் போலக் காதைக் கொடுத்தேன். கிசு கிசு குரலில், அவர் தணிவாகப் பேசினாலும் எனக்கு அவர் பேசுவதை நன்கு கவனிக்க முடிந்தது.

“…………………”

“அப்படியா வந்திருக்காளா, எத்தனை பவுன்ல வாங்கப் போறா, ஸ்ட்ரிக்டா சொல்லிடுங்கோ மூணு பவுனுக்குக் குறைஞ்சு போட்டா பிரயோசனப் படாதுன்னு. நானும் இங்க ஏற்கனவே சொல்லிதான் அனுப்பி இருக்கேன். ஆமா, நல்ல கல்லாப் பார்த்துப் போடுங்கோ, முன்ன ஒரு தடவ பிரச்னை ஆன மாதிரி ஆக வேண்டாம். ஜாக்கிரதை. அப்புறம் போன தடவ மாதிரி லேட் பண்ணாம நம்ம அமௌண்ட சீக்கிரம் செட்டில் பண்ணிடுங்கோ. புரியறதா?!”

“…………………………”

“இல்ல வேண்டாம், செக் வேண்டாம் சுவாமி! நீங்க வழக்கம் போலக் கேஷாவே கொடுத்துடுங்கோ, செக்குன்னா நமக்குப் பல பிரச்னை”

“…………………………”

“சரி! பரவால்லை, கொஞ்சம் சீக்கிரம் பாருங்கோ, நான் அப்புறம் பேசறேன்!” போனை வைத்து விட்டு வெளிவந்தார்.

நான் எங்கோ கவனிப்பது போல பராக்குப் பார்த்தவாறு நின்றிருந்தேன்.



(தொடரும்)

Monday, August 31, 2009

அம்பியின் அனுபவங்கள்....

இந்தக் கதையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்த நண்பருக்கு நன்றி!

********
‘அம்பி’ என்றும் ‘கிட்டாம்பி’ என்றும், ‘கிட்டு’ என்றும் செல்லமாக அழைக்கப்படும் நண்பர் கி।மு.வின் (இயற்பெயர் – கிருஷ்ணமூர்த்தி) ஜோதிட அனுபவங்கள்.

‘ஜோதிடத்தில் மெய்நிலை கண்ட ஞானி’ எனஅழைக்கப்படும் ஜோதிடர் தேவராஜனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சமீபத்தில் சந்தித்தேன்।

தற்பொழுது பார்க்கும் வேலையில் திருப்தி இல்லை, இன்னமும் திருமணமும் ஆகவில்லை। ஆதலால் என்ன செய்தால் பிரச்னைகள் சரியாகும் என அறிவதற்காக ஒரு சுபயோக சுபதினத்தில் அன்னாரைச் சந்திக்க முடிவு செய்தேன்.

அலைபேசியில் தொடர்பு கொண்டு ‘அப்பாயிண்ட்மெண்ட்’வாங்கிக் கொண்டேன்।

‘மதியம் 3 மணிக்கு மேல வாங்கோ’ என்றார் தேவர்।

அவர் வீட்டில்தான் ஜோதிடம் பார்ப்பதால் அவ்வாறே சென்று, அழைப்பானை அமுக்கினேன்। அன்னார் சிறிது நேரம் கழித்து வந்து கதவைத் திறந்தார். ‘வாங்கோ’ எனக் கூறிவிட்டு, வெற்றிலைச் சாற்றைத் துப்பிவிட்டு, துண்டால், வழிந்த சாற்றினைத் துடைத்தவாறே உள்ளே போனார். (எச்சல் இல்லையோ?)

‘அவங்களுக்குப் பார்த்துண்டிருக்கேன்। அப்புறம் நீங்க தான்’ என்றார். உள்ளே சற்றுவயதான மாமியும், 15 வயதுப் பையனும், பாயில் அமர்ந்திருந்தனர். இவர் ஒரு சிறு மேசை மீதுஅமர்ந்து கை விரலை விரித்தும், மடக்கியும் ஏதேதோ எண்ணத் தொடங்கினார்.

அசிஸ்டெண்ட் யாராவது இருப்பார்கள், கூட்டம் நிறையஇருக்கும் என நினைத்த நான் ஏமாந்து போனேன்। என்னைத் தவிர அங்கு யாருமே இல்லை. இவரும் பார்ட்-டைமாகத் தான் ஜோதிடம் பார்க்கிறாராம். மீதி நேரங்களில் புரோகிதமாம். நல்ல வரும்படியாம். அவரே சொன்னார். அன்று ஒரே நாளில் ஒரு சமாராதனையும் செய்து விட்டு, மூன்று திவசங்களையும் ‘அட்டெண்ட்’ செய்து விட்டு வந்ததாகப் பெருமையுடன் மாமியிடம் கூறிக் கொண்டிருந்தார். நானும் அசுவாரஸ்யமாய் காதைக் கொடுத்தேன்

“நீங்க இருக்கறது தனி வீடு தானே?”

“ஆமாம் மாமா”
“ம்ம் ஆச்சா! உங்களுக்கு வயத்தில எதாவது வலிகிலி இல்லைன்னா ஏதாவது பிரச்னை இருக்குமே!”
“ஆமாம் மாமா எப்படி இவ்வளவு கரெக்டா சொல்றேள்?”
“நான் எங்க மாமி சொல்றேன்! எல்லாம் ஜாதகம்னா சொல்றது!”
“ஆத்து வாசல்ல வலதுகைப்பக்கம் ஏதாவது மரமிருக்கா?”
“இல்லையே! இடதுகை பக்கம் தான் ஒரு சின்ன வேப்ப மரம்இருக்கு।”

“சரி! சரி! அதாவது உங்க ஆத்துக்கு வெளில, இடதுகைப் பக்கம் சரியா?”
“ஆமாஆமா”

“ம்ம்… ம்ம்… வெளில இருந்து பார்த்தா நான் சொன்ன மாதிரி வலது கைப் பக்கம்। வீட்டுக்குள்ளேருந்து பார்த்தா இடதுகைப் பக்கம் சரிதான்! ஆச்சா! ம்ம் ம்ம். உங்களுக்கும்॥ உடம்புல..இடது புறம்.. வந்து… வந்து… மச்சம்...”

“சும்மாச் சொல்லுங்கோ மாமா! நீங்க என் தோப்பனார்மாதிரி!”
“ம்! வேண்டாம் விடுங்கோ! ஒரு சினிமா படம் கூட வந்தது அது மாதிரி! தேவியின்திருவிளையாடல்னு நினைக்கறன்।”

“புரியறது மாமா சரிதான்! அய்யய்யோ! எப்படி இவ்வளவு கரக்டாச் சொல்றேள்।”

“ஜாதகம் சொல்றது மாமி! ஜாதகம் சொல்றது॥”

“ஆமாம் மாமா!! எப்படி இவ்வளவு துல்லியமா எல்லாத்தையும் சொல்றேள்! அய்யோ உங்க கிட்ட ஏதோ தெய்வீகசக்தி இருக்குன்னு நினைக்கிறேன்.”
“ம்ம்! ஹ!ஹ! ஆமா! ஆமா! எல்லாம் அவன் போட்ட பிச்சை। நீங்க ஒண்ணு பண்ணுங்கோ! நாளை மறுநாள் வாங்கோ! நான் எல்லாத்தையும் நன்னா ஒரு தரம் பார்த்து வக்கிறேன்। என்ன பரிகாரம் பண்றது, எப்படிப் பண்றது எல்லாத்தையும் நான் பார்த்துச் சொல்லிடறேன்।சரியா!”

“சரி மாமா! இவனோடதச் செத்தப் பாருங்களேன்! சரியாவே படிக்க மாட்டேங்கறான்। ஒரே வம்பு தும்பு.”

“ம்ம்! சரி! சரி! அடடா! ஹஸ்தமா! போ! படிப்பு கஷ்டம் தான்। இவனுக்கும் இவன்அப்பாக்கும் செத்த ஆகாதே!”

“ஆமா மாமா! சரியாச் சொன்னேள்! படிக்கவே மாட்டேங்கறானேன்னு எப்பப் பார்த்தாலும் திட்டிண்டே இருப்பார்.”
“ம்ம்! பையன் சேர்க்கை சரியில்லையே! ஒரே விளையாட்டு, டி।வி, ஊர் சுத்தறது… சரியா?”

“அட! ஆமா மாமா। அய்யோ, கரெக்டா நேரில பார்த்தது மாதிரிச் சொல்றேளே!”

“என்னத்த! எல்லாம் ஜாதகம் சொல்றது மாமி, ஜாதகம் சொல்றது। ஒரு சின்ன தோஷம் வேற இருக்கு। புதன் வீக்காயிட்டான் ஜாதகத்துல। சுக்ரன் வேற சூரியனோட சேர்ந்து மறைஞ்சுட்டான். சின்னதா ஒரு ஹோமம் பண்ணினாச் சரியாப் போயிடும். உங்களால பண்ணமுடியுமா?”

“பண்ணலாம் மாமா! எவ்வளவு செலவாகும்?”

“அது ஆகும்! எல்லாம் நான் பார்த்துக்கறேன்! ஆமா அவர் எங்க வேலை பார்க்கறார்?”

“பேங்கில மாமா! சின்னவ இப்பொதான் விப்ரோல வேலைக்குப் போக ஆரம்பிச்சிருக்கா…”

“ஆகா! பேஷ்! பேஷ்! எல்லாத்தையும் நான்பார்த்துக்கறேன்! யூ டோன்ட் வொர்ரி! என்ன ஹோமத்துக்கு ஒரு பத்து, பதினஞ்சாயிரம் ஆகும்। அப்புறம் பாருங்கோ! பையன் எப்படி மாறிப் போயிடறான்னு! அப்படியே பொண்ணு ஜாதகம் இருந்தாலும் கொண்டாங்கோ! கைவசம் நிறைய வரன் இருக்கு! நல்லதா ஒண்ணைப் பாத்து முடிக்கலாம், நிதானமா, அவசரமில்லாம. இப்போ பார்க்க ஆரம்பிச்சாதான் அடுத்த வருஷம் குரு மாறறப்போ கல்யாணம் பண்ண சரியா இருக்கும் என்ன சொல்றேள்?!”

“ஆகட்டும் மாமா! உங்களைத் தான் நம்பியிருக்கேன்! நீங்க தான்…”

“ஒண்ணும் கவலைப்படாதீங்கோ! அவருக்கும் உடம்பு சரியாயிடும்! ஆத்துப் பிரச்னை எல்லாம் சரியாயிடும்। நீங்க கவலையே பட வேண்டாம். எல்லாம் நான் பார்த்துக்கறேன்.”

“சரி மாமா! பைசா எவ்வளவுன்னு।”.

“ஆஹா! அதுக்கென்ன? நீங்க கொடுக்கறதைக் கொடுங்கோ! ஒண்ணும் பிராப்ளம் இல்ல।”

“சரி மாமா! அம்பது ரூபா வைச்சிருக்கேன்। சரிதானே!”

“ம்ம்। அம்பதா…. பொதுவா நான் ஒரு ஜாதகத்துக்கு நூறுல இருந்து இருநூறு வரைக்கும் வாங்குவேன்! இப்போ ரெண்டு பார்த்திருக்கேன் இல்லையா? பரவாயில்லை. நீங்க இப்போ இருக்கறதைக் கொடுங்கோ! பாக்கி அப்புறம் பார்த்துக்கலாம்.”

“இல்ல மாமா! இதுல நூறுரூபா இருக்கு! நான் நாளைக்கு வரப்போ மீதி எடுத்துண்டு வரேன்। வரட்டா?”

“ஆகா பேஷா!”

“செத்த இருங்கோ மாமா! நமஸ்காரம் பண்றேன்। டேய் நீயும் மாமாவைச் சேவியேண்டா?”

“ம்ம்! பரவாயில்லை! பரவாயில்லை! தீர்க்காயுசா இருங்கோ! என்னது! அபிவாதயே சொல்லாம எழுந்துண்டுட்டானே பையன்!”

” அது வந்து… இன்னும் பூணூல் போடலை மாமா!”

“அட! ராமா! சட்டு புட்டுன்னு போட வேண்டாமா?। வயசானப்புறம் பூணூல் போட்டு என்னபிரயோஜனம், பால்யத்தில போடாம?. அதான் பையன் இப்படி இருக்கான்! சரி சரி! பொண்ணு கல்யாணத்தோட பூணூலயும் வச்சிண்டுடலாம், ஒரே செலவாப் போயிடும்! சரியா?”

“சரி மாமா. நான் அவரண்டையும் இதைப் பத்தி சொல்றேன்.
வரட்டுமா?”

“ஆகா!”

மாமியும் பையனும் நகர, நான் உள்ளே அழைக்கப்பட்டேன்।

(தொடரும்)

Saturday, August 29, 2009

கடவுளும் கணபதி சுப்ரமண்ய அய்யரும் - இறுதிப்பகுதி

முதல் பாகம் இங்கே....

இரண்டாம் பாகம் இங்கே....

மூன்றாம் பாகம் இங்கே....


“இது தான் பீச்! நல்லா பார்த்துக்குங்கோ” என்றான் அம்பி


“ஆகா, ஆகா, ரொம்ப ஆனந்தமா இருக்கே, ஜனங்க எல்லாம் எவ்வளவு சந்தோஷமா இருக்கா, எனக்கு சந்தோஷத்துல கூத்தாடனும் போல இருக்கே”


“அதெல்லாம் இங்க பண்ணப்படாது, பண்ணினா போலீசுல புடிச்சுண்டு போய்டுவா, கூத்தாடறதுக்கெல்லாம் இங்க தனி இடம் இருக்கு।”


“அப்படியா, நிஜமாவா, என்னை அங்க கூட்டிண்டு போறியா அம்பி। நான் நன்னா கூத்தாடுவேன் தெரியுமா நோக்கு?”


” சாரி மாமா, உங்களையும் என்னையும் அங்க உள்ள விட மாட்டா, எல்லாரும், ஆணும், பெண்ணுமா ஜோடி ஜோடியாத் தான் போகணும்। அதுவும் இந்த மாதிரி டிரஸ் போட்டுண்டு போனேள்னா, வாசல்ல வச்சே அடிச்சுத் துரத்திடுவா.”


“அப்படியா, அய்யோ, திடீர்னு ஜோடிக்கு இப்போ நான் எங்கே போறது?” சோகமானார் கடவுள்।


“சக்தியை அழைத்தாள் வருவாளா?” யோசனையில் ஆழ்ந்தார்


“ஆமா ஏதோ கெட்ட வாடை வருதே காத்துல அது ஏன்” வினவினார் கடவுள் மூக்கைத் தேய்த்தவாறே!


“அதுவா, அதோ அங்க பாருங்கோ! எல்லாரும் மீன் பிடிச்சுட்டுக் காய வச்சிருக்காங்க, வலையெல்லாம் காயப் போட்டிருக்காங்க அது தான், மீன் வாசனை தான் எல்லாம்”


“எனக்கு என்னவோ வயத்தைக் குமட்டறதுடாப்பா॥ “


“அடப் போங்க மாமா! இதுக்கே இப்படிச் சொல்றீங்களே! இங்க “காசிமேடு”ன்னு ஒரு இடம் இருக்கு। அங்க நீங்க கிட்ட போனாலே போறும். அவ்வளவு தான். ஒரு வழியாயிடுவீங்க”


“அப்படியா, ஏன்?”


“ஏன்னா, அங்க தான் மீன்பிடித் துறைமுகம் இருக்கு। அங்க தான் மீனைக் காயவச்சு கருவாடா மாத்தறாங்க. அதுக்கானா கோடௌன்லாம் அங்க தான் இருக்கு. அங்க இருக்கறவங்களும் மனுஷங்க தான! அவங்க எல்லாம் பொறுமையா இல்ல! உங்களால கொஞ்ச நேரம் தாக்குப் பிடிக்க முடியலையா?. அவ்வளவு சுகவாசியா நீங்க”


“இல்லடா அம்பி! கோச்சுக்காதே, சந்தனம், சாம்பிராணி பன்னீர்னு ஒரே வாசனையோடே இருந்துட்டேனா அதான் ஒண்ணும் முடியலை”


இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது…। இடையில் ஒரு குரல்॥

“யோவ் பெரிசு, இன்னா, ......... ன்னா பத்து, ......ன்னா இருவது சரியா! இன்னான்றே,?!” என்றது।


அதிர்ச்சியானார் கடவுள்।


“வாங்கோ மாமா, ஓடிடலாம்। இவாள்லாம்... இவாள்லாம்...” பையன் பயத்தில் உதற ஆரம்பித்தான்.


புதிய நபரை முறைத்துப் பார்த்தார் கடவுள்।


அவருக்கு அந்நபர் மீது கோபம் வரவில்லை। மாறாகத் தான் உமையொரு பாகம் கொடுத்த தோற்றமும், படைப்புக் கடவுளான பிரம்மனின் மீது ஆத்திரமும் ஏற்பட்டது. மானிட உடல் எடுத்து வந்ததால், அந்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டிய தனது இயலாமையை நினைத்தும் மனம் நொந்தார்.


“இந்தாங்கோ நீங்க கேட்ட பணம், தயவு செய்து இங்கேருந்து போயிடுங்கோ” என்றார் கடவுள் அந்நபரிடம் இரக்கத்துடன்।


” ஆமா, ஆமா, நம்பளை நைசாக் கழட்டி விடு, ஆனா, ஷோக்கா, சின்னப் புள்ளைய தள்ளிக்கினு வந்திருக்கியே, பெரிய ஆள்ப்பா நீ” சொன்ன நபர் அங்கிருந்து வேகமாக நகர...


முரட்டு மீசை மற்றும் உடுப்பு அணிந்த நபர் ஒருவர் அந்நபர் முன்னால் வந்து நின்று....


“ஏய் இன்னாம்மே, டெய்லி எஸ்கேப்பானா விட்டுருவோமா நாங்க, எடு ரூபாயை” அந்த நபர் கதறக் கதற, மொத்தக் காசையும் பறித்துக் கொண்டு போனார் மீசைக்காரர்।


” ஏய் அம்பி என்னடா இதெல்லாம்!” என்றார் கடவுள் வருத்தத்துடன்...


“பிச்சை எடுக்குமாம் பெருமாளு, அத்தைப் பிடுங்குமாம் அனுமாரு! இது தான் மாமா மெட்ராஸ், நீங்க பார்க்கணும்னு நினைச்ச பாற்கடல்। எப்படி ஓ.கேவா”


“அய்யோ வேண்டாம்! வேண்டாம்! நான் எங்கேருந்து வந்தேனோ அங்கேயே போறேன்” சொன்ன கடவுள், “அம்பி! நான் ஒரு உண்மையைச் சொல்லட்டுமா, நான் தான் கடவுள்” என்றார்।


“ஹ! ஹ! இது மாதிரி சொல்லிக்கிட்டு நிறையப் பேரு திரியறாங்க மாமா! ஏன், இங்க கூட ஒருத்தர் கிரீடம் எல்லாம் வச்சுக்கிட்டு, டெய்லி டான்சு ஆடுறாரு, அதுவும் பொம்பளைங்க கூட, கேட்டா அவரு கிருஷ்ணன் அவதாரமாம்। அவர் கைல சங்கு சக்கரம் எல்லாம் இருக்காம். இன்னொருத்தர், தன்னைப் பாக்க வர்ற எல்லார் மேலயும் எச்சிலைத் துப்பிட்டு, ‘உன் பாவம் போச்சுங்கிறாரு’. இன்னொருத்தர் சாரயத்தையும் சுருட்டையும் மாறி மாறிக் குடிக்கிறாரு... ஆமா நீங்க எந்த மாதிரிக் கடவுள்?, எந்த மாதிரி அவதாரம்?” என்றான் அம்பி கிண்டலாய்.


“இல்லையப்பா! நான் தான் நிஜமான கடவுள்”


” ஓகோ சரிதான்! அதை எப்படி நான் நம்புறது। ஏதாவது நம்பற மாதிரி செய்யுங்களேன் பார்க்கலாம்” கிண்டலாய்க் கேட்டான் அம்பி.


“ம்! அற்புதம் அதிசயம் எல்லாம் பண்ணித் தான் கடவுள் தன்னை நிரூபிக்க வேண்டியிருக்கு। எல்லாம் கலிகாலம்! என்ன அற்புதம் பண்ணட்டும், வாயில இருந்து லிங்கத்தை வரவழைக்கட்டுமா!. இல்லை வெறும் காத்துல இருந்து செயின் வரவழைக்கட்டுமா?”


“லிங்கமா, என் கூட படிக்கிற பையனே வாயில இருந்து லிங்கம் எடுக்கறான்। செயின் வரவழைக்கறதெல்லாம் சும்மா ஓல்ட் டிரிக்! வேற ஏதாவது புதுசா॥”


“சரி! சரி! இப்போ உன்னை உங்க ஆத்து மொட்டை மாடிக்கு அழைச்சுண்டு போறேன் சரியா, கண்ணை மூடிக்கோ, என் கையைப் பிடிச்சுக்கோ”


“நிஜம்மாவா! சரி மாமா” அம்பி அரை குறையாகக் கண்ணை மூடிக் கொண்டான்।


’அரைகுறையா மூடப்படாது. இறுக்க மூடிக்கோ...’ சொன்னார் கடவுள்.
அம்பியும் உடனே தனது கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்। கடவுளின் கையைப் பிடித்துக் கொண்டான்.


“விஷ்க்” என்று ஒரு சத்தம் கேட்டது। வானில் வேகமாக எங்கோ பறப்பது போலும் தோன்றியது.


திடீரென்று ஏதோ ஒரு சப்தம் கேட்டது॥ அடுத்த கணம்... அம்பியும் கடவுளும், அம்பி வீட்டு மொட்டை மாடியில் இருந்தனர்।


“என்ன அம்பி இப்போ நம்பறியா?”


“மாமா, மாமா நீங்க நிஜமாவே கடவுளா?। இல்லை. சித்தரா!॥ மந்திரவாதியா? அய்யோ... என்னால நம்ப முடியலையே!” அய்யோ..நான் எப்படி.. எப்டி.. இவ்ளோ சீக்கிரம் இங்கே வந்தேன்.. ஆச்சர்யமா இருக்கே... ஆமா, என் வண்டி எங்கே...’


“கீழே பார்”


அம்பி எட்டிப் பார்த்தான் அவன் வண்டி வீட்டு வாசலில் பார்க்க செய்யப்பட்டிருந்தது।


“அய்யோ மாமா! மாமா! என்னால நம்ப முடியலையே! நிஜமாவே கடவுள் இப்படி எல்லாம் வருவாரா என்ன? கடவுளுக்கு நிறைய கை,கால், முகமெல்லாம் இருக்கும் சொல்வாளே... உங்களுக்கு அதெல்லாம் நம்ப முடியல்லையே! எங்க ஆத்துக்கு பிரமாணார்த்தம் சாப்பிட வர கோடி ஆத்து கோபால அய்யார் மாதிரின்னா நீங்க இருக்கேள்॥ அய்யோ ரொம்ப ஆச்சர்யமா இருக்கே, என்னால நம்பவே முடியலையே!” அம்பி அரற்றினான்।


“அம்பி! பரவாயில்லை நீ நம்ப வேண்டாம்! ஆச்சர்யப்படவும் வேண்டாம். எல்லாம் ஒரு கனவுன்னே வச்சுக்கோ. ஆமா, கடவுளை நீ நம்பவே வேண்டாம். உன்னை நீ முழுசா நம்பினாப் போறும். கடவுள் பேரைச் சொல்லி, நாட்டை ஏமாத்திக்கிட்டு இருக்கும் போலி சாமியார்களையும், வெத்து ஆன்மீகவாதிகளையும் விட, கடவுள் இல்லைன்னு சொல்ற ஒரு நாத்திகன் எவ்வளவோ மேல். நாத்திகனா இருக்கறதுல எந்த தப்பும் இல்ல. போலி ஆத்திகனா இருக்கறதை விட உண்மையான நாத்திகனா இரு।”


சொல்லி விட்டுக் கடவுள் மறைந்து போக...


அம்பி அப்படியே திகைத்துப் போய் நின்று கொண்டிருந்தான்।


(முற்றும்)


இந்தக் கதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்த நண்பருக்கு என் மனமார்ந்த நன்றி!

Friday, August 28, 2009

கடவுளும் கணபதி சுப்ரமண்ய அய்யரும்... 3

முதல் பாகம் இங்கே....

இரண்டாம் பாகம் இங்கே....

“என்ன சுவாமி நல்ல தூக்கம் போல இருக்கே” சாஸ்திரியார் எழுப்பவும் கடவுள் எழுந்து கொண்டார்।

“ஆமாம்! ஆமாம்! உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டே”

“ஆமா, ஆமா, குண்டருக்கும் கூடத் தான் உண்டு। அடேய் அம்பி, போய் பாலை வாங்கிண்டு வா சீக்கிரம்!” சாஸ்திரியார் விரட்டினார்.

” என்னன்னா! உங்காத்துல மாடு, கன்னு எல்லாம் இல்லயா, பாலைப் போய் வெளில எங்கேயோ வாங்கிண்டு வரச் சொல்றேளே” என்றார் கடவுள் ஆச்சரியத்துடன்।

” நான் தான் மாடு!, இதோ இந்த அம்பி தான் கன்னுக் குட்டி, நீங்க வேற செத்த சும்மா இருக்கேளா, காலம் இருக்கற இருப்புல!. ஆமா, மெட்ராஸ் என்ன உங்க ஊர்னு நினைச்சேளோ. மாடு, கன்னுன்னு இஷ்டம் போல இருக்கறத்துக்கு, இது மாநிலத் தலைநகர் சுவாமி, மாநிலத் தலைநகர்!”

“என்ன நகரோ, ஆனா நான் பார்க்கறவரைக்கும் எதுவுமே சரியில்லையே, வழியெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு। எங்கே பார்த்தாலும் ஒரே சாக்கடை. குப்பை, கூளம். கோயில் கிட்டயே, கொஞ்சம் கூட லஜ்ஜை இல்லாம அசிங்கம் பண்ணி வச்சிருக்காளே! கிராமமே தேவலாம் போல இருக்கே!


“ஏன் சுவாமின் , உங்க கண்ணுல நல்லதே படாதோ, எப்போ பார்த்தாலும் தீவீர சிந்தனையா இருக்கேளே!”

“ஆமா, ஆமா... இல்லை, இல்லை,... குரங்கு கைப் பூமாலையாப் போய்டுத்து இந்த பூமி, அதான்!”

“ஆமாமா அச்சரிதான்! அத்தை விடுங்கோன்னா, நீங்க எங்கே போகனும்னு சொன்னால் பையன் கொண்டு போய் விட்டுடுவான்। காபி சாப்பிட்டவுடனே கிளம்பத் தோதா இருக்கும்”


“நான் வந்து... இங்க ஏதோ பாற்கடல் இருக்காமே, அதைத் தான் பார்க்கனும்னு ஆசையா இருக்கு”

“ஓகோ! நீங்க பீச்சைத் தான் சொல்றேள்னு நினைக்கிறேன்। அது பாற்கடல் இல்லை சுவாமி, நாற்கடல், ஒரு பெரிய சாக்கடையே அதுல கலக்கறது தெரியுமோன்னோ”


“அது என்னவோன்னா, ஒரு தடவை பார்த்துட்டேன்னா, நன்னா இருக்கும்”

“ஆகா, பேஷா, அம்பி இவரைக் காப்பி சாப்பிட்டதும், அங்க கூட்டிக் கொண்டு போய் விடு। இல்லை பஸ்ல ஏத்தி விட்டாலும் சரி”


“சரிப்பா”

காபி ஆனதும் கடவுளிடமிருந்து ஒரு ஏப்பம் வெளிப்பட்டது। கடவுள் மனதிற்கும் மிகவும் சந்தோசமாக இருந்தது.


“சரின்னா, நான் கிளம்பறேன், ஏதோ உங்களை மாதிரி உள்ளவாலாள தான் நாட்டுல மழையே பெய்றது, ஏதோ என்னாலான உதவி, மறுக்காம வாங்கிக்கணும்” சொன்ன கடவுள் கையைத் திறக்க அதில் ஒரு நெல்லிக்காயளவு தங்க உருண்டை இருந்தது।


“அய்யய்யோ, இது ஏதுடா வம்பா இருக்கு, நான் என்ன பண்ணிட்டேன்னு எனக்கு இதைத் தர வரேள்। எனக்கு எதுவும் வேண்டாம்னா” மறுத்தார் சாஸ்திரியார்.


“சும்மா வாங்கிக்குங்கோ, கடவுள் கொடுக்கற மாதிரின்னு வச்சுக்கங்களேன்।”


“வேண்டவே வேண்டாம்னா। அப்புறம் யாராவது பார்த்துட்டு, கோயில் நகையை உருக்கி தங்கமா வச்சிருக்கான் அப்படிம்பா, இந்தக் கால் வயத்துக் கஞ்சியை மானத்தோட குடிக்கிறேனே அது போதும் நேக்கு, அந்த பகவான் ஒரு போதும் எங்களைக் கைவிட மாட்டான்.”


“ஆமா, நிச்சயமாக் கைவிட மாட்டான், நானும் கைவிட மாட்டேன்। கவலைப் படாம இருங்கோ. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்” நெகிழ்ச்சியுடன் சொன்ன கடவுளுக்குக் கண்கள் கலங்கி விட்டன. ஒரு நல்ல மனிதரைச் சந்தித்த திருப்தி அவர் மனதில் நிலவியது.


அனைவரிடமும் விடை பெற்ற கடவுள், மோட்டார் சைக்கிளில் உட்கார அம்பி, இப்போது பேண்ட், ஷர்டுக்கு மாறி, வேகமாக கடற்கரையை நோக்கி வண்டியைச் செலுத்தத் தொடங்கினான்।

(தொடரும்)

இந்தக் கதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்த நண்பருக்கு நன்றி

கடவுளும் கணபதி சுப்ரமண்ய அய்யரும்... 2


முதல் பாகம் இங்கே....

“அய்யோ... அய்யோ... அய்யய்யய்யோ!”

...சத்தம் கேட்டதும், “ஓவ்வ்! ஓவ்” என்று உளறிக் கொண்டே திடுக்கிட்டு எழுந்த கடவுளுக்கு, தாம் எங்கிருக்கிறோம், என்ன நடந்தது என்பதே முதலில் சற்றுப் புரியவில்லை. சில நிமிடம் வரை என்னது! என்னது! எனத் தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தார். பின்னர் தான் தெரிய வந்தது, குடுமி இல்லாத அம்பி, தனது குறட்டைச் சத்தம் தாங்க முடியாமல், டி.வியை, வேண்டும் என்றே அலற வைத்திருக்கிறான் என்பது.

டி.வியில் ஏதோ ஒரு பாடல் காட்சி ஓடிக் கொண்டிருந்தது, ஆணும் பெண்ணுமாய் அரைகுறை ஆடைகளில் குனிந்து, நிமிர்ந்து, கன்னா பின்னாவென்று குதித்துக் கொண்டிருந்தனர். அதைப் பார்த்த கடவுளுக்கு மேலும் ஆத்திரமாய் வந்தது.

“இந்த எழவுக்குத் தான் அப்போவே மன்மதனை எரிச்சுத் தொலைச்சேன், ஆனா என்ன பிரயோசனம்! எல்லாம் ரதியால கெட்டது” என்றார்.

“அய்யோ மாமா! உளறாதீங்கோ, இது ‘மன்மதன்’ இல்ல, ரதி இதுல நடிக்கவும் இல்ல. இது சிம்பு நடிச்ச ‘சிலம்பாட்டம்’ படம். ‘மன்மதன்’, ‘சிம்பு- ஜோதிகா’ நடிச்ச படம். நீங்க சினிமால்லாம் பாக்கவே மாட்டேளா” என்றான் அம்பி.

“வாழ்க்கையே ஒரு சினிமா தானேப்பா” என்றார் கடவுள்.

“ஆமா, ஆமா, அப்போ எல்லாம் நாடகம்னாங்க, இப்போ சினிமான்றாங்க அவ்வளவு தான் வித்தியாசம்”

“ஆமா, நீ என்ன படிக்கிறயா, வேலை பாக்கறயா?”

“இரண்டுமே செய்றேன்”

“ஆஹா, பேஷ், பேஷ், ஆமா என்ன படிக்கிறே?”

“பள்ளிக்கூடத்துல பாடமும் படிக்கறேன், ஆத்துல வேதமும் படிக்கறேன், நேரம் இருக்கறப்போ அப்பாவுக்கு ஒத்தாசையா கோவில்ல வேலையும் செய்றேன். அதோ அந்த போட்டோல, என் கூட இருக்கிறது தான் எங்க அக்கா. பெங்களூர்ல இருக்கா. கால் செண்டர்ல வேலை பார்க்கறா. அவ தான் மாசா மாசம் நான் படிக்கப் பணம் அனுப்பறா. நான் கலெக்டருக்குப் படிக்கப் போறேன் மாமா!”

“சமத்து, குழந்தைகள்னா இப்படி இல்ல இருக்கனும்!”

“ஆமா, உங்க பசங்க என்ன பண்றாங்க மாமா!”

“அவாளைப் பத்திப் பேச்சே எடுக்காத, ஆமா, எனக்குக் கெட்ட கோபம் வரும். எல்லாம் தகப்பனுக்கு மீறினதுங்க!”

“ஒகோ, கோபத்துல நல்லது. கெட்டதுன்லாம் வேற இருக்கா மாமா!”

“என்னடா இது, பெரியவாள் கிட்ட மட்டு மரியாதை இல்லாமப் பேசிண்டு” என்றபடியே உள்ளே நுழைந்தார் கணபதி சாஸ்திரிகள்.

“வாங்கோ, வாங்கோ, அதெல்லாம் ஒண்ணும் இல்ல. சும்மா பொழுது போகப் பேசிண்டு இருந்தான் அம்பி. என்னடா நாழியாச்சே இன்னும் காணோமேன்னு பார்த்தேன். வந்துட்டேள்”. என்றார் கடவுள்.

“ஆமா, ஆமா, அம்மாடி செத்த இலையைப் போடு, சாயரக்ஷைல நிறைய வேலை இருக்கும் போல இருக்கு” தனக்குள் அலுத்துக் கொண்டார் சாஸ்திரிகள்.

“என்ன இன்னிக்கு ஒரு நூறு ரூபாயாவது வந்திருக்குமா வரும்படி உங்களுக்கு” மகிழ்ச்சியுடன் வினவினார் கடவுள்.

“அடக் கடவுளே! நன்னாக் கேட்டேள் போங்கோ, இது ரொம்பப் பழங்கால, சாதாரண, சின்னக் கோயில் சுவாமின்! பெரும்பாலும் அக்கம் பக்கத்துல உள்ள ஏழை, பாழைகள் தான் வருவா. அவா கையில என்ன இருக்கோ, அதை அவா மனசுக்கு ஏத்த மாதிரி உண்டியல்லயோ, தட்டுலயோ போட்டுட்டுப் போவா! மத்தபடி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்ல. 5ம் வரும். 10 வரும். சில சமயம் ரொம்ப விசேஷ நாள்னா 50, 100 வரலாம். என்னவோ போங்கோ, சிலரை ஆகா, ஓகோன்னு ஆகாசத்துக்குத் தூக்கற அதே கடவுள்தான், சிலரை அப்படியே கீழேயே வச்சிருக்கான். என்ன காரணமோ யாருக்குத் தெரியும்? எல்லாம் பகவானுக்கே வெளிச்சம்.” என்றார் கணபதியார்.

“எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்கும் சுவாமின், நமக்கு என்ன தெரியும்?” என்றார் கடவுள் புன்சிரிப்புடன்.

’ஆமா... ஆமா... அச்சரிதான்’ என்றார் கணபதியார்.

’சரி... சில பேர் கோயில் உண்டியல்ல கை வக்கிறது, சுவாமி நகைல கை வக்கறதுன்லாம் செய்யறாளே, அது பத்தி நீங்க என்ன நினைக்கறேள்!’ என்றார் கடவுள்.

‘உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்றது, நம்பினவாளுக்கு துரோகம் பண்றது எவ்வளவு பெரிய குத்தமோ, பாவமோ அதே மாதிரி தான் அதுவும். அதுவும் சுவாமி நகைளலாம் கை வச்சா விமோசனமே இல்ல... ஆனா....’

‘ஆனா... என்ன ஆனா...’

‘மனுஷாளுக்குன்னு பொதுவா உள்ள நம்ம சட்டங்கள் வேற... தெய்வ சட்டங்கள் வேற.... சிலது சட்டப்படி தப்பா இருக்கலாம். ஆனா தர்மப்படி சரியா இருக்கலாம். அது அவா அவாளோட நோக்கங்களயும், சூழலயும் பொறுத்தது. ஆனா எப்படிப் பாத்தாலும் தப்பு தப்பு தான். இல்லையா!’ என்றார் கணபதி.

‘ஆமா... ஆமா...’ என்றார் கடவுள் ஏதோ யோசித்தவாறே!.

‘என்ன யோசனை சுவாமின்...’

‘இல்ல... கோயில் நகைய எடுத்ததுக்கு இவ்ளோ கூச்சல் குழப்பம். ஆனா ஆண்டாண்டு காலமா கோயில் சொத்தை, நிலத்தை, இடங்களை எத்தனையோ பேர் தலை தலைமுறையா அனுபவிச்சிண்டு வர்றா... அதைப் பத்தி யாருமே வாயத் திறக்கறதில்லையே ஏன்? அதைத் தான் யோசிக்கிறேன்’

‘நாம என்ன சுவாமி பண்ண முடியும், ஏழை சொல் அம்பலமேறாது. ஆனா அதை அந்தக் கடவுள் பாத்துண்டும் சும்மாதானே இருக்கான். ஆனா ரொம்பப் பேர் மறந்துடறா... சிவன் சொத்து குல நாசம்ங்கறத. சொத்து சின்னதோ பெரிசோ அது பிரச்சன இல்ல. எடுக்கறது பெரிய பாவம். அது குருக்களா இருந்தாலும் சரி... குத்தகைப் பார்ர்ட்டியா இருந்தாலும் சரி. அது அவங்க தலைமுறையத் தான பாதிக்கும்.’

’ஏதாவது பரிகாரம் பண்ணி தப்பிடுச்சிவாங்கப்பா...’ குறுக்கில் புகுந்தான் அம்பி.

‘எல்லா பாவத்துக்கும் பரிகாரம் பண்ண முடியாதுடா குழந்தே! அப்படிப் பண்ணாலும் பலன் இருக்காது. மனுஷங்களை ஏமாத்தலாம். கடவுளை, தர்மத்தை ஏமாத்தவே முடியாது.’ என்றார் கணபதியார்.

’ஆமா, ஆமா... படிச்சவன் சூதும் வாதும் பண்ணினால் அய்யோன்னு போவான்... அய்யோன்னு போவான்... என்றார் கடவுள்’ கண்களை உருட்டி விழித்தவாறே.
’அப்போ படிக்காதவன் பாவம் பண்ணினால்...’ அம்பி கிண்டலாகக் கேட்டான்.
’பாவத்தின் சம்பளம் மரணம்’ என்றார் கடவுள் இரு கைகளையும் தூக்கி ஆசிர்வாதம் செய்வது போன்று.
’சரி.. சரி வாங்கோ எல்லோரும் சாப்பிடலாம்’ என்றார் கணபதியார்.

எல்லாரும் மதிய உணவை உண்டுவிட்டு, களைப்பு தீரத் திண்ணையில் அமர்ந்தனர்.

“இந்தாங்கோ சுவாமின், கும்பகோணம் வெத்திலை! உங்களுக்கு வெத்திலை போடற பழக்கம் உண்டோன்னோ?” என்றார் கணபதியார்.

“ஆகா, பேஷா, அதான் அர்ச்சனை பண்ணும் போதே அதையும் சேர்த்து வச்சிடறாளே அப்புறம் எப்படி சாப்பிடாம இருக்க முடியும்?” என்றார் கடவுள்.

“உண்ட மயக்கம், அதான் அர்ச்சனை, நைவேத்தியம்னு ஏதேதோ உளர்றேள், அது போகட்டும், ஏன் எப்போ பார்த்தாலும் கோவில், பிரசாதம், நைவேத்தியம் அப்படின்னே பேசிண்டு இருக்கேள்?”

“அது ஒண்ணுமில்லை! ஹி! ஹி!” என்றார் கடவுள்.

” சரி! சரி! செத்த சிரம பரிகாரம் பண்ணிக்குங்கோ, சாயந்திரம் காப்பி ஆனதும், நீங்க எங்க போணுமோ அங்க அம்பியை விட்டு, பஸ் ஏத்தி விடச் சொல்றேன். சரியா?”

“சரிதான்னா!” நீங்க சொல்லிட்டேள்னா சரி”, சொல்லிவிட்டு அப்படியே திண்ணையில் சாய்ந்து, மீண்டும் மெல்லத் தூக்கத்தில் ஆழ்ந்தார் கடவுள்.
(தொடரும்)
இந்தக் கதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்த நண்பருக்கு நன்றி

Wednesday, August 26, 2009

கடவுளும் கணபதி சுப்ரமண்ய அய்யரும்...



திடீரென இருக்கையிலிருந்து எழுந்த சிவபெருமான் வேகவேகமாக எங்கோ கிளம்ப முற்படவும், பார்வதிஆச்சரியத்துடன் பார்த்தாள்.

“என்ன விசேஷம், எங்கே பயணம்?..” சற்று பவ்யமாக வினவினாள்.

‘சிவத்தைப் பார்க்க அனைவரும் இங்கு வந்து தவமிருக்க, இவர் வேறு எங்கோ செல்கிறாரே, என்னவாக இருக்கும்’ என்பது தான் உமையின் மனத்தில் இருந்த கேள்வி.

“பூவுலகம் தான் வேறென்ன!” சிவம் பதிலளித்தது.

“அய்யோ! அங்கேயா?” அச்சத்துடன் வெளிப்பட்டது பார்வதியின் குரல்.

“ஆமாம்! ஏன்?”

“ஏற்கனவே ஒருமுறை சென்று விட்டு பட்ட பாடு போதாதா? மறுபடியுமா?”

“இல்லை! இப்பொழுது உலகம் ரொம்ப மாறி விட்டது. நீ நினைக்கின்ற மாதிரி இல்லை. பூவுலகம்”

“நிஜமாகவா?! அப்படியானால் சரி! நானும் வருகிறேன்!”

“வேண்டாம்! வேண்டாம்!”

“இல்லை! நான் வரத்தான் போகிறேன்”

“வேண்டாம் சக்தி! நான் சொல்வதைக் கேள்! தேவைப்பட்டால் நானே உன்னை அழைக்கிறேன்”

“சரி ! தாங்கள் அழைக்கும் பொழுதோ அல்லது என் உதவி தேவைப்படும் பொழுதோ நான் அவசியம் அங்கு வருவேன்”

“நல்லது”

புறப்பட்ட சிவன் நேராக வந்து இறங்கியது சென்னையில் உள்ள ஒரு பழங்காலக் கோயில் ஒன்றில். உடனே தனது ரூபத்தை ஒரு வயதான மனிதர் போல் மாற்றிக் கொண்ட சிவன், மெல்ல கோயில் குருக்களை அணுகிப் பேச்சுக் கொடுக்கலானார்.

“என்ன சுவாமின்! சௌக்கியம் தானே!”

“ம்ம் சௌக்யத்துக்கென்ன குறை! கண்ணு தான் வர வர சரியாத்தெரியலை! நீங்க யாருன்னு சரியாப் பிடிபடலையே!”

“நம்ம கடியாபட்டி கணேசக் குருக்கள் இருக்காரோன்னோ அவரோட மச்சினன் நான்”

“ஓஹோ! அவரா! நன்னாத் தெரியுமே நேக்கு! பாவம் ரொம்ப நல்ல மனுஷன்! அதான் சீக்கிரம் போய்ச் சேர்ந்துட்டார். இந்த லோகத்துல நல்லவாளுக்கே காலம் இல்லன்னா!”

“ஆமா! ஆமா! சரியாச் சொன்னேள்! அப்புறம் என்ன விசேஷம்! கோயில்ல எல்லாம் பாதி புதுசா பெயிண்ட அடிச்ச மாதிரி இருக்கே! ஈரமே இன்னும் காயலையே!, அங்க அங்க குப்பைக் கூளம், மஞ்சள், கும்பம், சொம்பு, என்ன விசேஷம்?”

“ஆமா! அந்தக் கொடுமையை ஏன் சாமி கேக்கெறேள்! கிட்ட வாங்கோ! செத்தக் காதைக் கொடுங்கோ சொல்றேன்”

“------------”

“என்னது! அடக் கடவுளே! இதென்ன அக்கிரமமா இருக்கு, கேள்வி கேட்பாரே இல்லையா?”

“------------”

“யார் சுவாமின் கேட்கறது? அந்த பகவானே பார்த்துண்டு சும்மா தானே இருக்கான்”

“அப்படிச் சொல்லாதீங்கோ! நல்லது, பொல்லாது எல்லாத்துக்கும் கைமேல பலன்! நான் சும்மா விட்டுடுவேன்னு மட்டும் நினைக்காதீங்கோ”

“ஓஹோ, நீர் சும்மா விட மாட்டீரா, நீர் என்ன பெரிய பிராக்கியனா? போங்காணும், அவனவன் அஸ்தில புடிச்சுண்டு உட்காந்திருக்கான், இதுல நீர் வேற வந்து வெறுப்பேத்தறேள்”

“இல்லங்காணும், பகவான் பாத்துண்டு சும்மா இருக்க மாட்டான். நிச்சயம் தட்டிக் கேப்பான்னு சொல்ல வந்தேன்”

“ஆமா! நீங்க தான் மெச்சிக்கனும்! இங்க ஒரு பய வாயைத் திறக்கறது இல்ல தெரியுமோ! எல்லாருக்கும் பயம். எல்லாத்துக்கும் பயம்”

“அப்படியா?”

“ஆமா, ஆமா! ஏதோ பாட்டு கூட அந்தக் காலத்துல வருமே! வாய்ச் சொல்லில் வீரரடின்னு அந்த மாதிரி எல்லாம் வேஸ்ட்”

“சரி! இன்னும் எவ்ளோ இடத்துல இந்த மாதிரி! உங்களுக்கெல்லாம் இந்த மாதிரி தப்புத் தப்பா யார் சொல்லித் தறா ?”

“அதெல்லாம் எங்கிட்ட எதுவும் கேட்காதீங்கோ சுவாமின்! , நேக்கு எதுவும் தெரியாது. 108ன்னு கேள்வி, அதுவும் அடுத்த தமிழ் வருஷப் பிறப்புக்குள்ளயாம்”

“நடக்கட்டும்! நடக்கட்டும்! அப்புறம் அவா அவா பாடு”

“ஆமா நடை சாத்தலயா?”

“இதோ ஆச்சு, உச்சிக் காலம் ஆனதும் விநியோகம், அது முடிஞ்சவுடனே நடை அடைச்சுட்டுக் கிளம்ப வேண்டியது தான்”

“பிரசாதமா!” என்றார் கடவுள் நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டு.

“பிரசாதம் மாதிரி தான், ஆனா பிரசாதம் இல்லை, உங்களுக்கு வேணும்னா நீங்க அந்தக் கியூல போய் நின்னுண்டேள்னா கிடைக்கும்”

“சரி!சரி! நான் பார்த்துக்கறேன், நீர் உம்ம வேலையைக் கவனியும்” சொல்லி விட்டுக் கடவுள் பெரிய கியூவில், நடுவில் போய் நின்று கொண்டார்.

“யோவ், பாத்தா பெர்ய மன்சனாட்டம் கீறே, தபா, ஷோக்கா உள்ளார பூர்றியே நைனா, இன்னா, நாங்கள்லாம் நிக்கறது தெர்ல!” என்றான் கூட்டத்தில் ஒருவன்.

“என்ன சொல்ற நீ நேக்கு எதுவும் புரியலையே”

“ஆங்! எதுவும் புரியாமத் தான் சைடுல வார்ரீயா நைனா, போ, போ, அந்தாண்ட, கடைசில போய் நின்னுக்கோ, முன்சாமி அண்ணாத்தேக்கு வழி விடு”

கடவுள் தள்ளாத குறையாகத் தள்ளப்பட்டுக் கடைசியில் போய் நின்றார்.

சற்று நேரம் சென்றது.

“அடக் கடவுளே! என்னன்னா இது?” கணபதி சுப்ரமண்ய அய்யர் கவலையுடன் அருகில் வந்தார்.

“பரவால்லை, ஒண்ணும் பிரச்னை இல்ல. நான் கடைசியாவே நின்னுக்கறேன்” கடவுள் சோகமான குரலில் சொன்னார்.

“சரி நீங்க என்னோட வாங்கோ”

“அம்பி, டேய் அம்பி,” என அய்யர் குரல் கொடுக்க வேஷ்டி, துண்டு மட்டும் அணிந்து குடுமியில்லாத ஒரு வாலிபன், அருகில் வந்து “என்னப்பா?” என்றான்.

“இவர் நமக்குத் தெரிஞ்சவர், ஆத்துக்கு அழைச்சுண்டு போய் இலையைப் போடு, நான் செத்த நேரத்துல, நடையைச் சாத்திட்டு வரேன்”

“சரிப்பா” பையன் கடவுளுடன் புறப்பட்டான்.

மோட்டார் சைக்கிளில் ஏறி உட்கார்ந்த கடவுள், சற்று பவ்யத்துடன், “அம்பி, செத்த மெதுவாப் போ, நேக்கு வண்டியில எல்லாம் போய்ப் பழக்கம் இல்லை” என்றார்.

“சைக்கிள்ல கூடவா போனதில்லை”, என்றான் அம்பி ஆச்சர்யத்துடன்.

“ஆமா, ஆமா”

“அப்புறம் எப்படி, வெளில எங்கேயாவது போகணும்னா என்ன பண்ணுவேள்?, நடந்தேவா போவேள்?”

“இல்லை, இல்லை, எல்லாம் நந்தி தான், வாகனம் தான்”

“என்னது உளர்றேள்! நந்தி, வாகனம்னுண்டு”

“இல்ல, இல்லை, நடை தான், வாகனம் தாங்கிறதைத் தப்பாச் சொல்லிட்டேன்”

“சரி சரி, ஆம் வந்தாச்சு இறங்குங்கோ”

“ஆஹா, பேஷா, ஆமா, நீ என்ன கோவில்ல தான் இருக்கியா?”

“கோவில்ல சுவாமிதான இருக்கும்!, நீங்க என்ன கேட்க வர்றேள்னு நேக்குப் புரியலையே! அம்மா, அம்மா,..”

” என்னாடா?”

” இவர் அப்பாக்குத் தெரிஞ்சவராம், இலையைப் போடச் சொன்னார், செத்த நாழில வரேன்னார்”

“சரி சரி! வாங்கோ மாமா, உள்ற வாங்கோ, பாத்து, தலையைக் குனிஞ்சு வாங்கோ, நிலை இடிச்சுடப் போறது”

“ம், ம்ம், சொந்த ஆமா, ரொம்பச் சின்னதா இருக்கே!” என்றார் கடவுள்.

“சொந்தமா, எங்களுக்கு ஏது சொந்தம், எல்லாம் வாடகை தான்! நீங்க உட்காருங்கோ, தீர்த்தம் சாப்பிடறேளா!”

“ஆஹா, பேஷா”

“என்னது தண்ணி கசக்கற மாதிரி இருக்கே”

“இது பரவால்லை, சில சமயம் உப்பு வேற கரிக்கும், வாய் எல்லாம் புண்ணாப் போய் எரியும். சில சமயம் சாக்கடைத் தண்ணி எல்லாம் கலந்து வேற வரும். என்ன பண்றது தலை எழுத்து, குடிச்சு தானே தீரணும். காலம் காலமா இதைத் தான் சாப்பிட்டுண்டு வரோம் நாங்க, ஆமா, நீங்க என்ன மெட்ராசுக்குப் புதுசா?”

“ஆமா, ஆமா, நம்ம கடியாபட்டி கணேசக் குருக்கள் இருந்தாரோன்னோ, அவரோட சொந்த மச்சினன் நான், ஆமா, நீங்க எப்படிக் கண்டு பிடிச்சேள் நான் மெட்ராசுக்குப் புதுசுன்னு?”

“இல்லை, எல்லாத்தையும் ரொம்ப ஆச்சரியமாப் பார்க்கறேளே அதான் கேட்டேன்”

“ஆமா, ஆமா, ஹி..ஹி..” கடவுள் அசடு வழிந்தார்.

“அந்தக் காத்தாடியை வேணாப் போடட்டுமா, செத்த சிரம பரிகாரம் பண்ணிக்குங்கோ, அவர் வந்ததும் இலையைப் போட்டுடலாம், சரியா,”

“ஆஹா”

கடவுள், சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு, நவீன காற்றாடியின் குளுமையான காற்றில், சற்றே தன்னை மறந்தார்.


(தொடரும்)

இந்தக் கதையை பயன்படுத்திக் கொள்ள அனுமதி தந்த நண்பருக்கு நன்றி